Friday, 14 October 2011

காய கற்பம்

அரிது அரிது மானிடராய்ப் பிறத்தலரிது என்ற ஔவைப்பிராட்டியாரின் கூற்று சொல்லும் அவ்வரிய மானிடப் பிறவியின் வாழ்வானது உயிர், உடல் என்ற இரு கூறுகள் இணைந்ததாகும்.  உடலும் உயிருமான இவ்விரு கூறுகளும் ஒன்றையொன்று விட்டுத் தனித்திருப்பின் யாதொரு பயனும் இல்லை. இதனையேதான் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த தமிழ்க்குடியின் மொழியான தொன்மைத் தமிழ் மொழியின் எழுத்துக்களும் பறைசாற்றுகின்றன. மெய்யெழுத்துக்களோடு உயிரெழுத்துக்கள் கூடி உருவாகும் உயிர்மெய்யெழுத்துக்கள் இல்லையெனில் சொற்கள் உருவாகா.  இதன்மூலம் உயிரும் உடலும் இணைந்தே இருக்க வேண்டியதன் இன்றியமையாமையை உணரலாம்.

இத்தகு உயிரானது நம் உடலில் ஒன்றியிருக்கும் வரையே நமது ஆயுள் நீடிக்கிறது. உடலானது பல்வேறு ஆண்டுகளைக் கடக்கும்போது பிணி, மூப்பு போன்ற காரணங்களால் தனது ஸ்திரத்தன்மையை இழந்து வயோதிகத்தை அடைந்து உயிரைத்தன்னுடன் தக்கவைத்துக் கொள்ளும் தன்மையை இழக்கிறது. அதாவது உயிரானது அதற்குமேலும் அவ்வுடலில் தங்கியிருக்கவொண்ணாத நிலை ஏற்பட்டு உடலை விட்டு உயிர் பிரிய நேரிடுகிறது.இதன் மூலம் அறிவது யாதெனில் உடல் எவ்வளவு காலம் ஆரோக்கியமாய் இருக்கிறதோ அதுவரை மட்டுமே உயிர் அதனுடன் வாழ முடிகிறது. உடலின் இத்தகைய நிலையற்ற தன்மையறிந்துதான் "காயமே இது பொய்யடா" என்று பாடி இருக்கிறார்கள். உடலை பாதுகாத்துக்கொள்ளவல்லவர்கள் மட்டுமே தனது உயிரையும் நீண்டகாலம் 
காத்துக் கொள்ள முடியும் என்பதையே "உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன் உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே" என்று திருமூலர் அருளியிருக்கிறார். 

இதனையறிந்தே சித்தர் பெருமக்கள் யாவரும் காயம் என்ற இவ்வுடலை அழியாது என்றும் இளமையாக பேணிக் கொண்டு இறப்பின்றி இருக்க கற்பம் என்னும் வழியைக் கண்டறிந்து அதனைப் பயன்படுத்தி வந்தனர். காயம் என்னும் உடலை நீண்ட நாள் அழியாது பாதுகாத்திருப்பதே காயகற்பமாகும்!

"கற்பம்" என்பது பல மூலிகைகளாலும் முப்புச் சத்துக்களாலும் முறையோடு செய்த அமிழ்தமாகும். அதனை பாகம் தவறாது உட்கொண்டு வந்தால் எப்பொழுதும் முதுமை வராமல் செய்து கொள்ளலாம்.

கற்பத்தில் பல வகையுண்டு.  நந்தீஸ்வரர், போகர்,  கோரக்கர்,உரோமரிஷி, மச்சமுனி, இராமதேவர், அகத்தியர் மற்றும் ஏனைய சித்தர்கள் பலரும் பல்வேறு கற்பங்களையும் உண்டிருக்கிறார்கள்.

இத்தகைய காய கற்ப மூலிகள் சதுரகிரி மலையில் ஏராளமாக இருப்பதை இன்றும் காணலாம்!!

சப்த கந்த கோட்பாடுகள்


ஏழு கந்த கோட்பாடுகள்:

  1. நாதகந்தம்
  2. பிரவேஷகந்தம்
  3. பூரிதகந்தம்
  4. அந்தர் சுஷூம்னா கந்தம்
  5. அபிலாட்ச சங்கம கந்தம்
  6. கிரகபதார்த்த கந்தம்
  7. அனலேஷூ கந்தம்


மேற்சொன்ன இந்த சப்தகந்தங்கள் மனிதர்களின் வாழ்க்கையில் உன்னதமானதொரு இடத்தைப் பெற்றிருக்கின்றன. மனிதனின் ஆற்றல், சக்தி போன்றவைகளை இவை குறிப்பதோடு அவற்றால் பல சமயங்களில் மனிதனுக்கு ஏற்படும் பலமாறுதல் நிலைகளையும் சுட்டிக்காட்டுகிறது. அவைகள் என்னவென்று இங்கே தெரிந்து கொள்வோம்.

நாதகந்தம் : இது மனிதனை மனிதனாக்கக் கூடியது. அவன் பெற வேண்டிய பரிபூரண, பக்குவ உயர்ந்த நிலைகளுக்கு இறைப் பகுத்தறிவு ஒன்றே மூல காரணம்.

பிரவேஷ கந்தம்: இது ஜீவன்களின் அறிவை ஐந்தறிவு நிலைவரை மேம்படுத்தி நுண்புல உணர்வுகளை நிலைபெறச் செய்வதாகும். மனித சக்தியால் செய்ய முடியாத காரியங்களை எல்லாம் மிக அற்புதமாக செய்து முடிக்கும் ஆற்றல் உடையது இது.

பூரித கந்தம்: நியாயமான, முறையான மனித விருப்பங்களை இந்தச் சக்தியின் மூலம் பெறலாம்.

அந்தர்ஷூம்னா கந்தம்: இது மனித உள்ளத்தில் எழும் ஆசைகளை முறைப்படுத்தி, நிலைப்படுத்தி, தயாராக்கித் தரக்கூடியதாகும்.

அபிலாட்ச சங்கம கந்தம்:  இது மனிதனின் அபிலாக்ஷைகளை (விருப்பங்களை) முறையாகப் பரிணமிக்கச் செய்து அதனைக் காரியசித்தியாக்க உதவுகிறது.

கிரகபதார்த்த கந்தம்: ஊழ்வினை காரணமாக மனிதன் செயலற்றிருப்பதைத் தக்க பரிகாரம், பிராயச்சித்தம் மூலம் சீர்ப்படுத்திக் காரிய சித்திக்குத் துணை புரிகிறது இது.

அனலேக்ஷூ கந்த கந்தம்:  பகைமை, விரோதம், குரோதம், பொறாமை காரணமாக வாழ்வின் லட்சியம் சீர்குலையாமல் பாதுகாத்து சமய சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப மனிதனைச் செயல்பட வைக்கிறது இது. 

Thursday, 13 October 2011

அட்டமா சித்திகள் - காலங்கி நாதர்

அட்டமா சித்தியைப் பற்றி காலங்கி நாதர் கூறுவது.

அட்டமா சித்தி என்பது அணிமா, மகிமா, கரிமா, லகிமா, பிரார்த்தி, பிராகாமியம், ஈசாத்துவம், வசித்துவம் என்னும் எட்டு வகையாகும்.

அணிமா என்பது அணுரூபமான ஆன்மாவைப் போன்றதாகும்.

மகிமா என்பது மிகவும் பெருமையுடையதாகும். அதாவது மிகப் பருமனாதல்

கரிமா என்பது தன் உடல் கண்டிப்பு கட்டுப்பாடு இன்றி கண்டிப்பு கட்டுப்பாடு உள்ளவற்றை ஊருருவிச் செல்லவல்லதாகும்.

லகிமா என்பது மேரு மலை போன்ற கனமான வடிவத்தைத் தூக்கினாலும் இலகுத்துவம் உடையவன் ஆதல்.

பிரார்த்தி என்பது வேண்டியதை அடைவது. அதாவது நினைத்த போகமெல்லாம் பெறுவது.

பிராகாமியம் என்பது நிறைவுடையவனாதல். அதாவன்றி குறைவின்றி இருத்தல். அன்றியும் ஒரு தேகத்திலிருந்து மற்றொரு தேகத்திலே புகுவதும், தான் நினைத்த உருவங்களை எடுத்துக் கொள்ளுதலும், ஆகாயத்தில் சஞ்சரித்தலும் விரும்பிய போகங்களை எல்லாம் அனுபவிப்பதற்குத் தகுதியாதலுமாகும்.

ஈசாத்துவம் என்பது ஆட்சியுள்ளவனாதல். அதாவது யாவருக்கும் தேவனாகுதல்.

வசித்துவம் என்பது தேவர், அசுரர், பட்சிகள், பூதங்கள், மானிடர்கள், இந்திரன் முதலிய யாவும்/யாவரும் வணங்கி நிற்றல்.

குரு வணக்கம்



தெந்திசை உயர்ந்ததென்று
தாழவைக்கத் தானமர்ந்து
சிவய நமசிவ வென்று
பொதிகை மலையிருந்து-பரம்
பொருளின் பூரணத்தை
பாடலுக்குள் உணர்த்தி
வைத்த குறுமுனியே
அகத்தியனே!
உமைக் குருவெனவே
தாழ்பணிந்து தொழுகின்றேன்! 
உடனிருந் தருளிடுவாய்!